அதானியின் 60 வது பிறந்தநாள் : ரூ. 60 ஆயிரம் கோடி நன்கொடை வழங்க திட்டம்..
அதானியின் 60 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது குடும்பத்தினர் 60 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் கௌதம் அதானி. இன்று (வெள்ளிக்கிழமை) அவர் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளுக்கு இந்த நன்கொடையை வழங்கப்படும் என்றும் , அதானி அறக்கட்டளை சார்பில் இந்த பணிகள் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கௌவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் 100 வது பிறந்தநாளை ஒட்டியும், கௌவுதம் அதானியின் 60-வது பிறந்தநாளையொட்டியும் பல்வேறு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க உறுதிபூண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நாங்கள் செய்ய இருக்கும் நலத்திட்டங்களை எவ்வாறு செய்யலாம், எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பது குறித்து வல்லுநர்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் நாடியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக வழங்கப்படும் இந்த ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் என்று கூறப்படுகிறது. இந்திய கார்ப்பரேட் வரலாற்றில், ஒரு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிக நன்கொடைகள் வழங்கும் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பெப்பட் போன்ற உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் கௌதம் அதானியும் இணைந்துள்ளார்.