பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தோல்வி
காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாபின் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில் அவர் தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி வெற்றி பெற்றார். இதேபோல் அமரிந்தர் சிங்கின் கட்சி போட்டியிட்ட பல்வேறு தொகுதிகளிலும் பின்னடைவையே சந்தித்துள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் மிஞ்சி முன்னிலை வகிக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 59 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது வரை 91 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களிலும், சிரோமணி அலிகா தளம் 6 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.