மறைந்த ஜெனரல் பிபின் ராவத் நினைவாக அவரது பெயரில் ஆராய்ச்சி இருக்கை - ராணுவ தளபதி நரவானே அறிவிப்பு..
முப்படைகளின் தலைமை தளபதி மறைந்த பிபின் ராவத் நினைவாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி படிப்புக்கான இருக்கை அமைக்கப்படும் என ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அறிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த ஜெனரல் பிபின் ராவத், கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு செல்வதற்காக ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கிழே விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் , 14 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று மறைந்த பிபின் ராவத் அவர்களின் 65வது பிறந்த தினம். இதனையொட்டி அவரது நினைவாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி படிப்புக்களில் பிபின் ராவத்துக்கான இருக்கை அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ராணுவ படிப்புகளுக்கான யு.எஸ்.ஐ., எனப்படும், இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்தில், இந்த ஆராய்ச்சி படிப்புக்கான இருக்கையை ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே அறிவித்தார்.
இந்த இருக்கைக்காக யு.எஸ்.ஐ.,யின் இயக்குனர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பி.கே.சர்மாவிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை தளபதி நரவானே வழங்கினார். 'ராணுவத்தில் கூட்டு நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு, இந்த இருக்கையின் மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.