அசாம் வெள்ளம் : 100 பேர் பலி.. 54.7 லட்சம் மக்கள் பாதிப்பு..
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மே 2வது வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. அசாமில் பெய்து வரும் கனமழையால் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. நல்பாரி ,ஹோஜாய், பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ரஜார், சோனித்பூர் உள்ளிட்ட சுமார் 5,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 54. 7 லட்சம் மக்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்தும், விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி, சுமார் 99 ஆயிரத்து 026 ஹெக்டேருக்கும் மேல் விளைநிலங்கள் வீனாகியுள்ளன. அத்துடன் கனமழையால் அசாமில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று ஒரே நாளில் 4 குழந்தைகள் உள்பட 12 பேர் மரணம் அடைந்த நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன. இதேபோல் மேகலாயாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி நேற்று வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.