போர்க்களம் -அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைப்பு
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘கோனசீமா’ மாவட்டத்திற்கு ‘பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா’ என்று பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது. அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்த வந்த நிலையில், தற்போது அந்த அதிருப்தி கலவரமாக மாறியிருக்கிறது.
கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பிஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில் அமலாபுரத்தில் இருக்கும் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் வஸ்வரூப் வீட்டின் முன்பாக ஏராளமானோர் திரண்டு கல்வீசீ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் பெரும் பதற்றம் நீடித்தது.
காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட மின் கசிவுதான் வீடு தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் பலர் சொல்லி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சி சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் ஒரு கல்லூரி பேருந்தும், ஒரு அரசுப்பேருந்தும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காணப்படுகிறது.
வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.