மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோன தடுப்பு மருந்து - விலை என்ன தெரியுமா?

 
Nasal Vaccine Nasal Vaccine

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக கொரோனா தடுப்பூசி விளங்கி வருகிறது. தடுப்பூசியின் காரணமாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்ததோடு, தொற்று பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில்  கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.  இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் இந்த தடுப்பு மருந்து அரசுக்கு  325 ரூபாயில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.