ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. சிறுவர்கள், பெண்கள் உட்பட 24 பேர் பலி..
வங்கதேசத்தில் கோயிலுக்குச் செல்வதற்காக ஆற்றில் சென்றுகொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பக்தர்கள் பலியாகியுள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள பஞ்சகார் மாவட்டத்தில், பூதேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான இந்துக்கள், இந்த கோயிலில் வழிபாடு செய்ய சென்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கொரோடா என்னும் ஆற்றைக் கடந்தே செல்ல வேண்டும்.. அந்தவகையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கொரோடா ஆற்றைக் கடக்க படகு மூலமாக இக்கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அதிக பாரம் காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 24 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் சிறுவர்கள் ஆவர். அத்துடன் படகில் இருந்த மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரவு நெருங்கிவிட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. அதேநேரம் ஆற்றில் அதிக வெள்ளம் சென்று கொண்டிருப்பதாலும், காணாமல் போனவர்களின் நிலை குறித்த கேள்வி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.