செப்டம்பர் 27ம் தேதி முதல் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் கோவில் உள்ளே நடத்தப்பட்டது. மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை, அதேநேரம் பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட சேவையும், 2-ந் தேதி தங்க தேரோட்டம், 4-ந்தேதி தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடக்கும் கோவிலின் 4 மாட வீதிகளில் பிரம்மாண்டமாக வாகன சேவை நடத்தப்பட உள்ளது. இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிய வாய்ப்புள்ளதால்,அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருவோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை அன்று கருட சேவை நடப்பதால், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
முக்கிய வி.ஐ.பி.கள் தவிர்த்து மற்ற, வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். பிரம்மோற்சவ விழா முடியும் வரை கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருட சேவை நாளில், பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் பார்க்கிங்கில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு, அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் என 3 நாட்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்படாது என்றும், மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும், கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவு கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 நாட்களும் திருமலையில் இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும், பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..