EB- பில் கூட கட்ட முடியல.. ஆந்திராவில் மூடப்பட்ட 400 திரையரங்குகள்..
ஆந்திராவில் ரசிகர்கள் படம் பார்க்க வராததால், 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு சினிமா டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் திரையரங்குகளில் அதகளவிலான தொகை வசூல் ஆகாவில்லை.. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக இழப்பை சந்தித்து வந்த திரையரங்க உரிமையாளர்கள் , டிக்கெட் விலை குறைப்பால் நஷ்டத்தில் தியேட்டர்களை இயக்க முடியவில்லை என எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.
அத்துடன் தியேட்டர்களை மூடி வைத்து டிக்கெட் விலை குறைப்பிற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திரையரங்க உரிமையாளர்கள், முன்னணி நடிகர்கள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். அதன்பேரில் பின்னர் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் முன்னணி நடிகர்கள் நடித்த, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அதனுடன் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதை பெரும்பாலான ரசிகர்கள் தவிர்த்து வருகின்றனர். ஒரு காட்சிக்கு 20 முதல் 30 பேர் மட்டுமே திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருகின்றனர்.
இதனால் ஒரு காட்சிக்கு ரூ.2000 முதல் 3000 வரை மட்டுமே வசூலாவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்தத்தொகை தியேட்டர் பராமரிப்பு செலவுக்குக் கூட போதவில்லை எனவும், மின்சாரக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஆந்திராவில் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் வருகிற தசரா பண்டிகையின்போது முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. ஆகையால் அதுவரை நஷ்டத்தில் இயங்கும் தியேட்டர்களை மூடி வைக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்து , நேற்று முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.