அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இருக்காது - நிதின் கட்கரி

 
nitin

இந்தியாவில்  அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இருக்காது எனவும், அதற்கு மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம், அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சார்பில்,  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். பசுமை ஹைட்ரஜன், எத்தனால், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆகிய பசுமை எரிபொருள்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும். நாட்டில் வேளாண்துறை வளா்ச்சி தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருபது சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்துவதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் வேளாண் நிபுணா்களும் ஆராய்ச்சியாளா்களும் ஈடுபட வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் விவசாயிகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி  தெரிவித்தார்.