தெலங்கானா குடியரசு தின நிகழ்ச்சியை புறக்கணித்த முதல்வர் சந்திரசேகர ராவ்..

 
சந்திரசேகர ராவ்..

குடியரசு தின விழாவை ஒட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில் இந்த விழாவினை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்  புறக்கணித்துள்ளார்.  

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழாக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்வர். அந்தவகையில்  ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும்  இடையே கருத்து வேறுபாடு காரணமாக  ஒரு இடைவெளி இருந்து வருகிறது.  

தெலங்கானா குடியரசு தின நிகழ்ச்சியை புறக்கணித்த முதல்வர் சந்திரசேகர ராவ்..

இதனால் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜனுக்கும்  மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பப்பட்டது.  அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர்  ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளதாகவும்,  குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேசியக்கொடி

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது. இருந்தபோதிலும்,  இன்று காலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றினார்.  நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆனால்  இந்த  குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.  நீதிமன்றம் உத்தரவிட்டும்  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.