பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 10ம் வகுப்பு மாணவன் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
UP

உத்தரபிரதேச மாநிலத்தில் சக மாணவனுடன் சண்டையிட்டதை பள்ளி முதல்வர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவன் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து வந்து பள்ளி முதல்வரை சரமாரியாக சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில்  10ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவனுக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பள்ளி முதல்வர் ராம்சிங் வர்மாவுக்கு தெரியவர, அவர் சண்டையிட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் முதல்வர் ராம்சிங் வர்மாவை அந்த நாட்டு துப்பாக்கியால் இருமுறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான். உடனடியாக அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் முதல்வர் ராம்சிங் வர்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி முதல்வரை மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தலைமறைவான மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.