5-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி தற்கொலை
காப்பி அடித்த காரணத்திற்காக கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத தடை விதித்து விட்டதால் 5-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டம் முல்பாகலை பகுதி. இப்பகுதியைச்சேர்ந்த 21 வயது மாணவி பெங்களூரு கோரமங்களா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்திருக்கிறார். இதற்காக அவர் ஜீவன்பீமாநகர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த ஒரு தேர்வில் மாணவி காப்பி அடித்திருக்கிறார். கல்லூரி ஊழியர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரின் தேர்வுத்தாளை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள். காப்பியடித்த காரணத்திற்காக இனிமேல் தேர்வு எழுதவும் கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. இதனால் மனம் உடைந்து போயிருக்கிறார் அந்த மாணவி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி தனது சகோதரியிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது, தேர்வில் காப்பி அடித்து விட்டதால் தேர்வு எழுத தடை விதித்து விட்டார்கள் என்றும், அதனால் தான் மன உளைச்சலில் இருக்கிறேன். சாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு செல்போனை துண்டித்திருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சகோதரி பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு பதறிப்போன பெற்றோர்கள், உடனே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள். அதற்குள் அந்த மாணவி தங்கும் விடுதியின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மாணவியின் தற்கொலை குறித்து அறிந்த ஜீவன்பீமாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.