அக்னிபாத்-க்கு எதிராக காங்கிரஸ் நாளை போராட்டம் அறிவிப்பு ..
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக “அக்னிபாத்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில் பணிபுரியலாம்.. அதன்பின்னர் சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில் இருந்த் விடுவிக்கப்படுவர். பணித் திறனின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது.
இந்நிலையில், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 4வது நாளாக பீகார், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தென் மாநிலங்களான தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட இளைனர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த போராட்டங்களின் போது பீகார், உ.பி., தெலங்கானாவில் ஆகிய மாநிலங்களில் 4 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அத்துடன் ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.