இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் - பாஜகவிற்கு பின்னடைவு

 
congress

இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. அதுபோலவே கடும் போட்டி நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 38 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 

பெரும்பான்மைக்கு தேவையான 37 தொகுதிகளையும் தாண்டி காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்கள் மூவரும் பாஜகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடதக்கது.