அசாம் , மேகாலயாவில் தொடரும் மழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 54 பேர் பலி..
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 2,900 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நல்பாரி ,ஹோஜாய், பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ரஜார், சோனித்பூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பகலாடியா, புத்திமாரி, ஜியா, கோபிலி, பரலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்தோடுகிறது, பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்தும், விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி, சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் விளைநிலங்கள் வீனாகியுள்ளன. அத்துடன் கனமழையால் அசாமில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளது. வீடுகள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை 54 பேர் பலியாகி இருக்கின்றனர். அதில் நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 19 லட்சம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மேகாலயா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மயிஸ்னராம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1003.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் மக்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் உதவியுடன் மீட்டு முகாம்களுக்கு அழைத்து வருகின்றனர்.