2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 10 பேர் பலி..
இந்தியாவில் புதிதாக 1,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 .46 கோடியை தாண்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா உட்பட உலக நாடுகளையே உலுக்கி வந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், அதன் பாதிப்பு இன்னும் முழுவதுமாக நீங்கிவிடவில்லை.. தற்போது வரையிலும் கூட தினசரி கொரொனாவால் பாதிக்கப்படுவதும், கொரோனாவுக்கு பலியாவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன்படி, இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக, 1,946 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரொனாவுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 10 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,28,923 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 4,40,79,485 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் விகிதமும் 1.18% ஆகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.06% ஆகவும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,76,787 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 219 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.