இந்தியாவில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தீபாவளி என்பதால் பரிசோதனைகள் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே குறைவான அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,980 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,93,409 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,549 ஆக குறைந்துள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 23,791 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219.56 கோடியை தாண்டியுள்ளது.