அக்னிபத் திட்டம் - பாதுகாப்பு துறை அமைச்சர் 2வது நாளாக ஆலோசனை
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.
இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில் பணிபுரியலாம்.. அதன்பின்னர் சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில் இருந்த் விடுவிக்கப்படுவர். பணித் திறனின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது. இந்நிலையில், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார், உ.பி., தெலங்கானாவில் 4 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணிநிறைவு பெற்றவுடன், மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இருந்த போதிலும் போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை. இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அக்னிபத் திட்டம் பற்றி முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இதில் கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில், துணை ராணுவ தளபதி ராஜு பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டாத்தில் அக்னிபத் திட்டங்களை அமல்படுத்துவது மற்றும் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்துவது, சவால்கள் ஏற்பட்டால் அதை சந்திப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.