டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

 
ed

டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  11 கலால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டெல்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார்.

 இதனையடுத்து புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 35 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சில மதுபான வினியோகஸ்தர்கள், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சோதனையிடப்படுகின்றன.