டெல்லி, காஷ்மீரை அதிரவைத்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெரும்பாலான மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜம்மு-காஷ்மீர், டெல்லி மாநிலங்களிலுள்ள பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது என்று கூறப்பட்டது. இந்து குஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஷாஸ்ஷான்ங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தலை சுழல்கிறது என்று நினைத்து கண்களை மூட ஆரம்பித்தேன். திடீரென்று மின்விசிறியைப் பார்த்தபோது அது நில அதிர்வு என்பதை உணர்ந்தேன்.
நொய்டாவில் 25-30 வினாடிகளுக்கு கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது” என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். இதேபோல இதற்கு முன்னதாக உத்தரக்காண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் உத்தர்காசி பகுதியில் உணரப்பட்டுள்ளது.