இலங்கையில் வசிக்கும், செல்ல இருக்கும் இந்தியர்கள் ஜாக்கிரதை - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்..
இலங்கையில் வசித்து வரும் மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் காரணங்களால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மருந்து , பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவையும் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். அங்கு சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. பிற நாடுகளில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள இலங்கை அரசு , பிறநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிறுத்திவிட்டது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளார்களே காரணம் என மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் மகிந்த ராஜபக்சே அரசு பதவி விலகி, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்க புதிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் தீவு நாடான இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியதாவது, “இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கான பொதுவான வழிகாட்டி நெறிமுறைகளாவது, இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களுடன் தொடர்புடைய விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி. ஆகவே, இலங்கையில் இருக்கும்போது, அனைத்து இந்தியர்களும் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கை பயணத்திற்கு முன்பு கரன்சி நோட்டுகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழ்நிலை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து காரணிகளை பற்றியும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.