இமாச்சலபிரதேச தேர்தல் - முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் வெற்றி

 
Jairam Thakur

இமாச்சலபிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தான் போட்டியிட்ட சிராஜ் தொகுதியில் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. அதுபோலவே கடும் போட்டி நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், பாஜக 31 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 35 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்கள் மூவரும் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், இமாச்சலபிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தான் போட்டியிட்ட சிராஜ் தொகுதியில் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெய்ராம் தாக்கூர், மாண்டி மாவட்டத்தில் உள்ள சிராஜ் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் தொடங்கியதில் இருந்து ஜெய்ராம் தாக்கூர் முன்னிலை பெற்று வந்தார். இந்த நிலையில், சிராஜ் தொகுதியில் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிராஜ் தொகுதியில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.