திருப்பதியில் மருத்துவமனையில் தீ விபத்து - மருத்துவர், அவரது 2 குழந்தைகள் பலி..

 
திருப்பதியில் மருத்துவமனையில் தீ விபத்து -  மருத்துவர், அவரது 2 குழந்தைகள் பலி..

திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி,  அதே கட்டிடத்தில்  வசித்து வந்த மருத்துவர் மற்றும் அவரது இரு குழந்தைகள்  உயிரிழந்தனர்.

ரேணிகுண்டா அடுத்த பிஸ்மில்லா நகரில்,  கார்த்திகா என்கிற பெயரில்   தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது .  இந்த மருத்துவமனையின் முதல் மாடியில் மருத்துவமனை  உரிமையாளரான  மருத்துவர் ஹரிசங்கர் ரெட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் மின்கசிவு காரணமாக அதிகாலை வேலையில் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தி மளமளவென முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்கு பரவியயது.  இதில் முதல் மாடியில் தங்கியிருந்த மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர்   தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் .

இறப்பு

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடத்தின் ஒரு பகுதியை உடைத்து உள்ளே சென்றனர்.   அங்கு சிக்கியிருந்த மருத்துவர் ஹரிசங்கரின் ஆறு வயது மகள் கார்த்திகா மற்றும்  11 வயது மகன் சித்தார்த் உட்பட நான்கு பேரை மீட்டனர். ஆனால் தீ விபத்தில் ஏற்பட்ட   மூச்சுத் திணறல் காரணமாக சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதேபோல தீ விபத்தில் சிக்கிய ஹரிஷங்கர் ரெட்டியும் சடலமாக மீட்கப்பட்டார். தீ விபத்தில் சிக்கி மருத்துவர் மற்றும் அவரது குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றன.