குஜராத்தில் ரூ. 3,050 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி ..
குஜராத்தில் இன்று ரூ. 3,050 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
வருகிற டிசம்பர் மாதத்துடன் குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனையொட்டி அங்கு ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேநேரம் அங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் உட்கட்சி மோதலில் வலுவிழந்து இருக்கிறது. அத்துடன் பஞ்சாப்பில் தேர்தலை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்ற அதே பாணியைல் ஆம் ஆத்மி கட்சியும், குஜராத் தேர்தலை களம் காண்கிறது. இந்தநிலையில் இன்று பிரதமர் மோடி, குஜராத்தில் ரூ3,050 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக குஜராத் வருகிறார்.
அப்போது, நவ்சாரியில், ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ (குஜராத் கவுரவ் அபியான்) பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 7 திட்டங்களை தொடங்கி வைக்கவும், , 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகிய பணிகளை செய்ய உள்ளார். அத்துடன் நவ்சாரியில், எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையையும் மோடி திறந்து வைக்கிறார்.
அதேபோல் அகமதாபாதில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மைய தலைமையகத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில், விண்வெளி துறையில் பணியாற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது, பரிமாற்ற நிகழ்ச்சியு ஆகியவையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.