பெங்களூரு மாநகராட்சியில் ரூ. 2,000 கோடி சொத்து வரி வசூல்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ. 2000 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான சொத்து வரியை வசூல் செய்யும் பணிகளில் நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் பெங்களூரு மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி வசூல் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. பின்னர் வரி வசூலிக்க தொடங்கிய முதல் 28 நாட்களிலேயே அங்கு ரூ.1,000 கோடி வசூலாகியிருக்கிறது.. குறுகிய காலத்தில் அதாவது 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. மாநகராட்சிகளின் வரி வசூலில் இது புதிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
ஆர்வத்துடன் முறையாக வரிசெலுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாக முதல் மாதம்( ஏப்ரலில் ) 5 % தள்ளுபடி வழங்கப்பட்டது. பின்னர் இந்த தள்ளுபடி சலுகை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி சலுகை வழங்கப்பட்ட ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் மட்டும் பெங்களூரு மாநகராட்சியில் ரூ. 2000 கோடி வரி வசூலாகியிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் தீபக் , சொத்துவரி செலுத்தும் நடைமுறையில் செய்த சில மாற்றங்களால் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக சொத்துவரி வசூல் அதிகரித்துள்ளதாகவும், வரும் நாட்களிலும் வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் நடைமுறையை சீரமைக்க உள்ளதாகவும், கட்டிடங்களின் உரிமையாளர்கள் சரியான முறையில் வரியை செலுத்துகிறார்களா? என்பது குறித்து கட்டிட சர்வே நடத்தி வருவதாகவும் கூறினார்.