ஜம்மூ காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : பஞ்சாயத்து தலைவரை கொன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காமில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் 3 பஞ்சாயத்து தலைவர்கள் அடுத்தடுத்து தீவிரவாதிளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் மற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பீதியில் இருந்து வந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் இன்று காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை அவர்கள் சுற்றி வளைத்தபோது, எதிர்பாராத விதமாக தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிப் பொருட்களுடம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் , இவர்கள் மூவரும் பஞ்சாயத்து தலைவரரான சமீர் அகமது பட் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த 9ம் தேதி கோன்மோஹ் பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருந்த சமீர் அகமது பட் டை பயங்கரவாதிகள் வீடுபுகுந்து சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.