காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு

 
Mallikarjuna Kharge

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக  மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்றார். 

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 

Kharge

இந்த நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.   சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர். முன்னதாக இன்று காலை மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.