குடியரசுத் தலைவர் தேர்தல்.. 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா..
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, மெற்கு வங்க முதல்மைச்சர் மம்தா பானர்ஜி நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்திக்கிறது. அத்துடன் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜுலை மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனயடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை மாநிலங்களின் பங்கி மிக முக்கியம் என்பதால், பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டம் தீட்டி வருகின்றனர். அந்தவகையில் சரத்பவாரின் பெயரை எதிர்க்கட்சிகள் முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டில் உள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதன்படி , டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், குடியரசுத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.