மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு..
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவையும் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தின் நோனே மாவட்டத்தில் உள்ள துப்புல் யார்டு என்கிற இடத்தில் ரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருக்கின்றன. கடந்த புதன்கிழமை இரவு ரயில்வே கட்டுமான பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
அந்த நிலச்சரிவில் சிக்கி, 25 பேர் உயிரிழந்திருந்தனர். மீதமுள்ள 38 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ராணுவம் உள்ளிட்ட மீட்பு படையினர் களம் இறக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், 3வது நாளான நேற்றைய தினம் சிலரது உடல்கள் மீட்கப்பட்டது. இதுவரை நிலச்சரிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.