குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா - எதிராளியின் முகத்தில் பஞ்ச் வைத்தார்!

 
roja

ஆந்திராவில் பரிசளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சரும், நடிகையுமான ரோஜா அங்கு குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

பிரபல நடிகையான ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவர் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலைத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சாராக உள்ளார். இவர் அம்மாநிலத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது, வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், விளையாட்டில் பங்கேற்று அசத்துவார். இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். 

பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.