2 நாட்களில் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்.. அடுத்தடுத்து அரங்கேறும் தீவிரவாத தாக்குதல்.. 9 பேர் சுட்டுக்கொலை..
பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ள நிலையில், அங்கு அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதலில், 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேநேரம் 2 வீரர்களும் மர்ணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் சிறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல இருக்கிறார். ஆனால் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஜம்முவில் சதா முகாம் அருகே 15 சிஐஎஸ்எஃப் வீரர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த தாக்குதலில் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் மரணமடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து பதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேபோல் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் மால்வா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தீவிரவாத தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி யூசுப் கான்ட்ரூவும் ஒருவர். மேலும் ஒரு அதிகாரி மற்றும் ஒரு காவலர் உள்பட நான்கு வீரர்கள் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இதுபோன்று சுஞ்வான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சொல்லப்பட்ட நிலையுல், ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். 6 வீரர்கள் காயமடைந்தனர். பிரதமர் மோடியின் வருகைக்காக ஜம்மு, காஷ்மீர் தயாராகி வரும் நிலையில் அங்கு அவ்வப்போது அரங்கேறும் தீவிரவாத தாக்குதல் பதற்றத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.