புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது : அரிசி, கோதுமை, தயிர் விலை உயர வாய்ப்பு..
அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி மூட்டையின் விலை 100 ரூபாய் வரை உயரக்கூடும்.
கடந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கடந்த ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், முன்கூட்டியே லேபிளிடப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர், அரிசி உள்ளிட்ட சில்லறை உணவுப் பொருட்கள் மீது 5% வரியும், காசோலைகள் வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதமும், மருத்துவமனையில் அறை வாடகை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) நோயாளி ஒருவருக்கு, நாளொன்றுக்கு ரூ.5000க்கு மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5 சதவீதமும் , அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீதமும் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தவிர, மேலும், ரூ.1000 வரை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு புதிதாக ஜி.எஸ்.டி விதித்து, அதை 12 சதவீத வரம்பிற்குள் கொண்டுவந்திருக்கிறது. இதேபோல் எல்இடி விளக்குகள், சாதனங்கள், கத்திரிக்கோல் உள்ளிட்ட தையல் சார்ந்த பொருட்கள், பென்சில், ஷார்ப்னர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், முள் கரண்டிகள் போன்ற சில்வர் பொருட்களுக்கும், லேடிஸ் ஸ்கிம்மர்கள், கேக் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரியை 18% ஆக உயர்தியுள்ளது. இதேபோல் பல சேவைகளுக்கும், பொருட்களுக்கும் ஜிஎஸ்டி திருத்தப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18 ( இன்று ) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி புதிய விதிகள் அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வின் மூலம் 5 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி மூட்டையின் விலை 100 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.