சீனா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு - நள்ளிரவு முதல் அமல்

 
China

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிபந்தனை நள்ளிரவு அமலுக்கு வருகிறது. 
 
சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட இத்தகைய வைரஸால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபனு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங் காங், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் இந்த புதிய விதிமுறை நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வருகிறது.