‘இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை.. டாலரின் மதிப்பு உயர்கிறது’ - நிர்மலா சீதாராமன் பேச்சு..
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியவில்லை.. டாலரின் மதிப்பு உயர்வதாகத்தான் நான் பார்க்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்இன் மதிப்பு 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்றவை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருவதற்கு காரணமாகும். அதேநேரம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை... மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து வலுவடைந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன்.
வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அந்த நாடுகளின் பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகவே உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால்தான் பணவீக்கமும் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்” என்று தெரிவித்தார்.