சபரிமலையில் மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி..
சபரிமலையில் மண்டல பூஜையன்று 40 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சபரிமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதி வருகிறது. சராசரியாக நாள்தோறும் 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிவதால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், உடனடி முன்பதிவு நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது. இதையொட்டி 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி நாளை (வெள்ளிக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. மண்டல பூஜையானது 27-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் தந்திரி தலைமையில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுடன் பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
பின்னர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். இதற்கிடையே மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தங்க அங்கி மலைக்கு எடுத்து வரப்படுவதை ஒட்டி 26-ந் தேதி மதியத்திற்கு மேல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27-ந் தேதி 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.