சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு..

 
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு.. 

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து நாள்தோறும், 90 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 41 நாட்கள் நீடித்த மண்டல பூஜையின்  இறுதி நிகழ்வு கடந்த 27ம் தேதி நடைபெற்றது.  வெகு விமரிசையாக நடைபெற்ற மண்டல பூஜையில், ஐய்யப்பனுக்கு வழக்கம்போல 450 பவுன்  தங்க அங்கி அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். பின்னர் மாலை பூஜைக்குப் பிறகு நடை அடைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

சபரிமலை

இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.  பின்னர் நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை ஆகியவை நடைபெறும். அதன்பிறகு மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு,  மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான  மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோல்  மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். அப்போதும் கட்டாயம் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.