வலுக்கும் எதிர்ப்பு.. சலுகைகளை அறிவிக்கும் மத்திய அரசு.. அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு..
அக்னிபாத் எதிர்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக “அக்னிபாத்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில் பணிபுரியலாம்.. அதன்பின்னர் சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில் இருந்த் விடுவிக்கப்படுவர். பணித் திறனின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது. இந்நிலையில், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 4வது நாளாக வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தென் மாநிலங்களான தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. பீகார், உ.பி., தெலங்கானாவில் 4 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது,.
அதனைத்தொடர்ந்து இன்று பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணிநிறைவு பெற்றவுடன், மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்னிபாத் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு 3 வயது வரை விலக்கு அளிக்கப்படும் என்றும், இத்திட்டத்தின் முதல் பேட்ஜ் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு வயது வரம்பில் 5 வயது வரை விலக்கு அளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது, இளைஞர்கள் போராட்டத்தை தணிக்கவே மத்திய அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.