நமது அரசியல் சாசனமே நமக்கு மிகப்பெரிய பலம் - பிரதமர் மோடி பேச்சு

 
pm modi

நமது அரசியல் சாசனமே நமக்கு மிகப்பெரிய பலமாகும் எனவும், அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார். விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

modi

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-  மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும். இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும். இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.