வ.உ.சி.யின் லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன - பிரதமர் மோடி

 
Modi - NITI Aayog

வ.உ.சிதம்பரனாரின் லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

வ. உ. சிதம்பரனார் இந்திய விடுதலை சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.  ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தின் மூலம் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டார் . இதன் காரணமாக ஆங்கிலேய அரசால் தேச துரோகியாக குற்றம் சாட்டப்பட்ட இவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழிலும்,  ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் ,சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  தான் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டதுடன்,  மற்றவர்களையும் பங்கு கொள்ள இவர் முக்கிய காரணமாக இருந்தார்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 


இந்த நிலையில், வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  மாண்புமிகு வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நமது தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு அடைவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது லட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.