நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் : பிரதமர் மோடி விடுவிக்கிறார்..
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படும் 8 சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி , குனோ தேசிய பூங்காவில் விடுகிறார்.
இந்தியாவில் 1952 ஆண்டிலேயே சீட்டா ரக சிறுத்தைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. அதன்பிறகு இந்த சிறுத்தையை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்தவகையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெற ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை நமீபியா இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என மொத்த 8 சீட்டா ரக சிறுத்தைகள் , விமானம் மூலம் நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.
ஜெய்ப்பூருக்கு வரும் இந்த சிறுத்தைகள் பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளையொட்டி இன்று குணோ தேசிய பூங்காவில் விடுவிக்கிறார். இதன்மூலம் மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய நாட்டு சிறுத்தைகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடமாட உள்ளன. மேலும் இந்த சிறுத்தைகளை ரேடியோ காலர் பொருத்தி அவற்றின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது