பி.எம் கேர்ஸ் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி - பிரதமர் மோடி வழங்குகிறார்..
பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ , பாதுகாவலர்களையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பி.எம்.கேர்ஸ் திட்டம் கடந்த தொடங்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி முதல் , நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கே இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
ஆதரவின்றி உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்கும் விதமாகவும், 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளிப்பது, மருத்துவக் காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகிய அனைத்தும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்வோருக்கு நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வாயிலாக வழங்குகிறார். அப்போது இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான திட்ட கணக்கியல் புத்தகம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள குழந்தைகள் தங்களது பாதுகாவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பங்கேற்கிறார்கள்.