பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்த பிரியங்கா காந்தி..
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து, இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். பின்னர் தமிழகத்தைக் கடந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களைக் கடந்து கடைசியாக ராகுல் காந்தி பாதயாத்திரையை குஜராத்தில் முடிவடைந்தது. நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல் காந்தியை , அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் மட்டும், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில், ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் , காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார்.
மேலும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகன் ரைஹான் வத்ராவும் ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்” என்றும் பதிவிட்டுள்ளது. இன்றைய யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்லும் அவர்கள், பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர்.