ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு சிக்கல்?.. திடீரென கடும் கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு..
ஒற்றுமை யாத்திரையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடியுங்கள் இல்லையென்றால் யாத்திரையை தள்ளி வையுங்கள் என ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று திடீரென வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கிவிட வேண்டும் என்றும், உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் நாடு முழுவதும் ராகுல் காந்ஹி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மத்திய அரசு திடீரென நிபந்தனை விதித்துள்ளது. ராகுல்காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்று கருதி மத்திய அரசு ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் அவருடன் செல்பவர்களும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்கள் மட்டுமே பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டும். பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் முன்பும், கலந்து கொண்ட பின்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேச நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.