புதுச்சேரியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு - நாராயணசாமி

 
Narayanasamy

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதால் புதிதாக தொழில் துவங்க புதுச்சேரி எவரும் முன்வருவதில்லை புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ராணுவத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் காலாப்பட்டில் சத்யாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள அரசு கொறடா அனந்தராமன், வட்டார தலைவர் முகுந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னாள் அமைச்சர் நாராயணசாமி இந்த போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினார். 

போராட்டத்தின் போது நாராயணசாமி பேசியதாவது: காலாப்பட்டு தொகுதியில் தொழில்முனைவோர் எந்த ஒரு தொழிலும் தொடங்க முடியவில்லை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. இதனால், தொழில் முனைவோர் புதிய தொழில் துவங்குவதற்கு புதுச்சேரிக்கு வர அஞ்சுகின்றனர். மோடி தலைமையிலான மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான அரசு. மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு, மீனவர்களுக்கு தனி துறையை உருவாக்கி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை.நிர்வாகத்தை கையில் எடுக்க தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை எனக் கூறும் கவர்னர் தமிழிசை, நிலம் சம்பந்தமான அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.