டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை டெல்லியை அடைந்துள்ளது. மாநில எல்லையில் அவருக்கு உற்சாக அவரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி , இந்திய ஒறுமைக்கான நடைபயணம் என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கிய ராகுல், அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10 மாநிலங்களை கடந்து 108-வது நாளான இன்று காலை தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார். டெல்லி எல்லை பதர்பூரில் மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ராகுலின் பாதயாத்திரை புறப்படும் போது அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுலுடன் அணிவகுத்து வந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அப்போது இரண்டாவது முறையாக ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள சோனியா, இந்த முறை முக கவசம் அணிந்து இருந்தார். மேலும், ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக ராகுலின் பாத யாத்திரையில், பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவருக்கு அருகில் மக்கள் கூட்டம் நெருங்காதபடி, சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி போலீசார் அணிவகுத்து வருவார்கள். ஆனால் இன்று பாதுகாப்பு முறையாக செய்யாததால் காங்கிரஸாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையை பாதுகாப்பாக வழிநடத்திச் சென்றனர். இன்று இரவு செங்கோட்டை அருகே தங்கும் ராகுல், டெல்லியில் மட்டும் 9 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார். புத்தாண்டு ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஜனவரி 3-ம் தேதி யாத்திரையை தொடங்குகிறார்.