மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ ராட்சத மீன்
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை ராட்சத கரகசா மீனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடல் கேப்டன் என்ற மீன்பிடி படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அரபிக் கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள் வீசிய வலையில் இராட்சத வகை அபூர்வரக மீன் ஒன்று சிக்கியது.
பின்னர் அங்கிருந்து மல்பே மீன்பிடித் துறைமுகம் வந்த மீன்வரகள் வலையில் இருந்து அந்த மீனை வெளியில் எடுத்து பார்த்த போது, அது அரியவகை மீன் வகைகளில் ஒன்றான, கரகசா மீன் என்பது தெரியவந்தது. 10 அடி நீளமும் 250 கிலோ எடையும் இருந்த இந்த மீன், ரம்பம் போன்ற மிக நீண்ட பற்களை கொண்டிருந்தது. அரிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கரகசா மீனை ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
அதன் பின்னர் இந்த அதிசய மீனை மீனவர்கள் மல்பே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மங்களூரு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கரகசா மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது