#Rewind2022 : ஓங்கிய பாஜக கை- நடைபயணத்தில் காங்கிரஸ்
2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். இந்த சூழலில் 2022 ஆம் ஆண்டு சில மகிழ்ச்சிகளை கொடுத்திருந்தாலும், பல ஆரா ரணங்களை விட்டு சென்றது என்றே சொல்லலாம். 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை சற்று நினைக்கூர்வோம்.
கொரோனா
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கம்போல் நம்பிக்கையுடன் பிறந்தாலும், கொரோனா இரண்டாம் அலை, ஒமிக்ரான், கருப்பு பூஞ்சை உள்ளிட்ட சில தொற்றுகளும் கூடவே நம்மை துரத்தின. இந்திய அளவில் ஜனவரி மாதத்தின் உச்சகட்டமாக, ஒரே நாளில் சுமார் 3 லட்சம் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாதமாகவும் ஜனவரி மாறியது. அதன்பின் இரண்டாம் டோஸ், பூஸ்டர் என பலக்கட்டமாக தடுப்புமருந்து செலுத்தி கட்டுக்கொண்டுவரப்பட்ட தொற்று, மீண்டும் டீசம்பரில் தலைத்தூக்கியுள்ளது.
பாஜகவின் கை ஓங்கியது
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதேபோல் கோவாவிலும் பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக முதல்வர் அரியணையில் தொடர்கிறார். உத்தரகண்ட்டில் பா.ஜ.க 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதேபோல் மணிப்பூரிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்தது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி அரியணையை கைப்பற்றியது. குஜராத்தில் 156 தொகுதிகளை கைப்பற்றி பாஜக வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. இமாச்சல பிரதேசத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்று வாகை சூடியது. பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி ஆதரவில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
நடைபயணத்தில் காங்கிரஸ்
நாட்டின் இரண்டாவது தேசிய கட்சியான காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக தனது வலுவை இழந்துவரும் நிலையில், குலாம் நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகினர், இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே நியமிக்கப்பட்டார். மூத்த தலைவர்களின் ஆலோசனையின்பேரில் ராகுல்காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் காஷ்மீரில் நிறைவடையவுள்ளது.
குடியரசு தலைவரான பழங்குடி
இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பாஜக பரிந்துரைத்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரெளபதி பதவியேற்றார். இவர் ஒரு பழங்குடியினர் என்பது குறிப்பிடதக்கது. முதன்முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் அரியணையை அலங்கரித்தார்.
கலைந்த கூட்டணி; கவிழ்ந்த ஆட்சி
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சியில் திடீரென பிளவு ஏற்பட்டு, எம்எல்ஏ ஏக்நாத் சிண்டே தலைமையில் சில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறின. அதன்பின் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அடுத்து சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது. பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் சிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
உலுக்கிய பேரழிவு
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் சாமி கும்பிடச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் 12 பக்தர்கள் பலியாகினர். குஜராத்தில் போடாட் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்தனர். பீகாரிலும் கள்ளச்சாராயம் குடித்த 72 பேர் உயிரிழந்தனர். இதேபோல் குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது, 131 பேர் உயிரிழந்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-3 இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடி தலைமையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தின. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டின் அதே மதிப்பு அடங்கிய டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்திய அரசு முதல் முறையாக டெக்னாலஜி நிறுவனங்களுக்காக புதிய விதிகளை நிறுவியது. அதன்படி வாடிக்கையாளர்களின் விவரம் பாதுகாப்பு, அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளுக்கும் ஒரே சார்ஜ்ர் கருவி போன்ற விதிகள் அமல்படுத்தப்பட்டன.அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்தவழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் தங்களையும் விடுதலைச் செய்யக்கோரி மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று விடுதலை செய்ய நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை உபா சட்டத்தின் கீழ் சட்ட விரோத அமைப்பு என இந்திய அரசு அறிவித்ததுடன் இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்தது.
மரணம்
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் டிசம்பர் 30 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதேபோல் நடிகர்கள் தவசி, ஹரி வைரவன், சலீம் கவுஸ், சிவ நாராயணமூர்த்தி, பூ ராமு, பிரதாப் போத்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.