"ஆந்திர-தெலங்கானா பிரிவு" சர்ச்சை.. பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டிஸ்!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உரையாற்றி வருகிறார். தேசிய அளவில் கவனம் பெற்ற ராகுல் காந்தி ஆற்றிய உரையைக் குறிவைத்து காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறார் மோடி. அந்த வகையில் கடந்த 8ஆம் தேதி ஆந்திரா-தெலங்கானா பிரிவு குறித்து பேசி காங்கிரஸ் கட்சி மீது விமர்சனத்தை முன்வைத்தார்.
கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு ஆந்திராவும் தெலங்கனா மாநிலமும் 2014ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பிரிந்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் நிறைவேற்றப்பட்டது. அந்த சமயம் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவங்களை விவரித்து பேசிய பிரதமர் மோடி, "ஆந்திராவையும் தெலங்கானாவையும் பிரிப்பதில் அப்போதைய மத்திய அரசான காங்கிரஸ் அவசர அவசரமான முடிவை எடுத்தது. இதன் காரணமாக இரு மாநிலங்களுமே நிறைய சிக்கல்களைச் சந்திக்கின்றன.
முழுக்க முழுக்க அரசியல் சுயலாபத்திற்காக காங்கிரஸ் இதைச் செய்ததால் இரு மாநிலங்களில் முறையாகப் பிரிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் முறையான விவாதத்தை நடத்தவிடாமல் மைக்கை ஆப் செய்தார்கள். கதவுகளை மூடினார்கள். பாஜக ஆந்திரா-தெலங்கனா பிரிவினையை எதிர்க்கவில்லை. மாறாக முறையான விவாதம் நடத்தி அமைதியான முறையில் பிரித்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது” என்றார். அவரின் இந்தப் பேச்சு தெலங்கனா மாநிலத்திலும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தொண்டர்கள் மத்தியிலும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
தெலங்கானா மாநிலம் உதயம் பெற தங்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பிரதமர் பேசியிருக்கிறார் என பொங்கி எழுந்தனர். இச்சூழலில் ராஜ்யசபாவில் டிஆர்எஸ் கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸை கொண்டுவந்துள்ளனர். டிஆர்எஸ் நாடாளுமன்ற குழு தலைவர் கேஷவா ராவ் தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவை செயலரிடம் உரிமை மீறல் நோட்டீஸை கொடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் அதன் மாண்பை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.