நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ல் கூடுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மழைக்கால கூட்டத் தொடர் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது, ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதனை பரிந்துரைத்து செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குடியரசுத் தலைவர் தேர்தலும் ஜூலை 18-ஆம் தேதி தான் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போதே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலமும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அத்துடன் பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்துக்களால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி, நேஷனல் ஹெரால்டு வழக்கு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறும் என்றும் கருதப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.